அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்கவே முடியாது: இடதுசா‌ரிக‌ள்!

வியாழன், 19 ஜூன் 2008 (10:35 IST)
இந்தியா- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாஇடதுசா‌ரிக‌ள் க‌ட்‌சிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பிரச்சினையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கட்சி தலைவர்கள் அடங்கிய அரசியல் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு 10 முறை கூடி பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெறுவதாக இருந்த அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் பேச்சுவார்த்தை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த கூட்டம் வருகிற 25 ஆ‌ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், இடதுசாரி கட்சி தலைவர்கள், நேற்று மாலை டெல்லியில் தனியாக கூடி அணுசக்தி ஒப்பந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்துக்குப்பின், இடதுசாரி கட்சிகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

"சர்வதேச அணுசக்தி கழகத்துடன், அணு உற்பத்தி பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தத்தின் வரைவு நகல் வழங்கப்படாததால் அதுபற்றி நாங்கள் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே, பாதுகாப்பு ஒப்பந்த நடைமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக்கூடாது'' என்றும் அறிக்கையில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இடதுசாரி கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் பிரகாஷ் கரத் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஏ.பி.பரதன் (இந்திய கம்யூனிஸ்டு), தேவப்பிரதா பிஸ்வாஸ் (பார்வர்டு பிளாக்), டி.சந்திரசூடன் (புரட்சிகர சோசலிஸ்டு) ஆகியோர் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டு உள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரசும் அணுச‌க்‌தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளனர். இந்த பரபர‌ப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளும‌ன்ற‌த்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றியும் காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடு‌த்த ஆ‌ண்டு மே மாதம் வரை உள்ளது. மாறிவரும் அரசியல் சூழ்நிலை காரணமாக, வரு‌கிற நவம்பர் மாதமே நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்