டி.ஆர். பாலு விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (13:10 IST)
டெ‌ல்‌லி : மத்திய சாலை, கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்றும், அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் மக்களவை நடவடிக்கைகள் 30 நிமிடத்திற்குப் பாதிக்கப்பட்டது.

இன்று காலை அவை கூடியதும், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒரு சேர எழுந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு டி.ஆர். பாலு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இதற்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, பாலு விவகாரம் கடந்த வெள்ளிக்கிழமை அவையில் எழுப்பப்பட்டதாகவும், அது குறித்து விவாதிக்க அனுமதி கோருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அனுமதி கோரி தாக்கீதுகள் வந்துள்ளதாகவும், அவைகளின் மீது தான் முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் அமைதியுடன் நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்