10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ‌வி‌ண்‌ணி‌ல் வெ‌ற்‌றிகரமான பா‌ய்‌ந்தது!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (12:49 IST)
ஸ்ரீஹ‌ரிகோ‌ட்டா‌ ‌வி‌‌ண்வெ‌ளி மைய‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று விண்ணில் வெ‌ற்‌‌றிகரமாக பா‌ய்‌ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் `இஸ்ரோ' சார்பாக, ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. செயற்கை கோள்களை அனுப்புவதற்காக, இந்த வகை ராக்கெட்டுகள் இதுவரை 12 முறை விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. தற்போது 13-வது முறையாக இன்று விண்ணில் செலுத்தப்ப‌ட்டது.

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.23 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-9, ராக்கெட் விண்ணுக்கு ‌‌‌சீ‌றி பா‌ய்‌ந்தது. அதில், இந்தியாவின் 2 செயற்கை கோள்கள் உட்பட 10 செயற்கை கோள்கள் அனுப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது. மீதி 8 செயற்கைகோள்களை கனடா, ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தயாரித்துள்ளன.

இந்தியாவின் 'கர்டோசாட்-2ஏ' மட்டுமே, 690 கிலோ எடை கொண்ட பெரிய செயற்கை கோள். இது சுமார் 10 கி.மீ., சுற்றளவிலான பரப்புகளை கருப்பு-வெள்ளையில் படம் பிடித்து அனுப்பும்.

மற்றவை அனைத்தும் 'நானோ' எனப்படும் சிறிய வகை செயற்கை கோள்கள். இந்தியாவின் மற்றொரு கோளான ஐ.எம்.எஸ்.-1, 83 கிலோ எடை கொண்டது. வெளிநாடுகளில் செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ ஆகும்.

உலகில் இதுவரை எந்த ஒரு நாடும், ஒரே நேரத்தில் 10 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி வைத்தது இல்லை. அதிகபட்சமாக ர‌ஷ்யா 8 செயற்கை கோள்களையும், ஐரோப்பா 7 செயற்கை கோள்களையும் ஒரே ராக்கெட்டில் அனுப்பி வைத்துள்ளன. அமெரிக்காவின் `நாசா' சார்பாக, ஒரே சமயத்தில் 4 செயற்கை கோள்கள் அடிக்கடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், தற்போதுதான் முதன் முறையாக ஒரே சமயத்தில் 10 செயற்கை கோள்களை அனுப்பி வைத்து உலக அளவில் இந்தியா சாதனை படைக்க உள்ளது.

ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இன்று காலையில் விண்ணுக்கு புறப்ப‌ட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட், `கர்டோசாட்-2ஏ' செயற்கை கோளை முதலில் விண்ணில் நிலை நிறுத்தும். அதனைத் தொடர்ந்து தலா 45 முதல் 100 வினாடிகளில் ஒவ்வொரு செயற்கை கோளாக, மொத்தம் ஆயிரம் வினாடிகளுக்குள் அனைத்து செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளன. பூமியின் சுற்றுப்பாதையில் 635 கி.மீ., தொலைவில் அவை நிறுத்தப்படும்.

`கர்டோசாட்-2ஏ' செயற்கை கோள் மூலமாக, நாடு முழுவதும் உள்ள சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை கண்காணிக்க முடியும். புலனாய்வு பணிகளுக்கும் இந்த செயற்கை கோள் உதவும். அய‌ல்நாடுகளை சேர்ந்த செயற்கை கோள்கள் தகவல் தொழில்நுட்பம், நானோ தொழில் நுட்ப பணிகளுக்கு உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்