சமையல் எண்ணெய் இறக்குமதி வரி ரத்து

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (11:44 IST)
விலைவாசி தொடர்பான மத்திய அமைச்சரவை குழு சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்வது என்று முடிவு செய்துள்ளது.

விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று இரவு விலைவாசி தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூடி ஆலோசித்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தின் முடிவுகள் பற்றி செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரி 7.5 விழுக்காடாக குறைக்கப்படும். இந்த வரி குறைப்பு, ரத்து பாமாயில்,தேங்காய் எண்ணெய்,சூரிய காந்தி எண்ணெய் உட்பட எல்லாவித சமைய‌ல் எண்ணெய்களுக்கும் பொருந்தும்.

நெய், வெண்ணைக்கு இறக்குமதி வரி 40 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக குறைக்கப்படும். மக்காச் சோளத்திற்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும். இது 5 லட்சம் டன் இறக்குமதி வரை பொருந்தும். இந்த வரி ரத்து ம‌ற்றும் குறைப்பு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தற்போது இறக்குமதி வரி விதிக்க கணக்கிடப்படும் விலை, அப்படியே தொடரும்.

உருக்கு அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அந்நிய நாடுகளுக்கு சென்று இருப்பதால், உருக்கு வரி நீக்கம் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதன் விலையை குறைக்க மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம், உருக்கு உற்பத்தியாளர்கள், இரும்பு தாது உற்பத்தியாளர்களின் கூட்டு கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசிக்கும்.

அத்தியாவசிய பண்டங்களின் சட்டத்தின் அட்டவணை‌யில் உள்ள பொருட்களை அதிகபட்சமாக இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கும் சட்டம் அமல்படுத்தப்படும். இந்த சட்டத்தை முன்‌பிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ரத்து செய்தது. காங்கிர‌‌ஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தை ஐந்து அல்லது ஆறு மாநில அரசுகள் ம‌ட்டுமே அமல்படுத்துகின்றன. இதை மற்ற மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்று சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்