காந்தி அஸ்தியின் இறுதிப் பகுதி அரபிக் கடலில் கரைப்பு!
புதன், 30 ஜனவரி 2008 (14:51 IST)
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 60வது நினைவு நாளை முன்னிட்டு அவரது அஸ்தியின் இறுதிப் பகுதி இன்று அரபிக் கடலில் கரைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி அஸ்தியின் இறுதிப் பகுதி அடங்கிய கலயம், மும்பை அருகில் அவர் கடைசியாகத் தங்கியிருந்த மணி பவனில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இன்று காந்தியின் 60வது நினைவு நாளை முன்னிட்டு அந்தக் கலயத்தை அரபிக் கடலில் கரைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி தெற்கு மும்பையில் நடந்த அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மராட்டிய ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா, மராட்டிய மாநிலத் துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரின் அஸ்தி, நமது நாட்டின் முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்கப்பட்டது. அப்போது சிலர் அதில் சிறிதை எடுத்துச் சென்று பாதுகாத்து வந்தனர்.
இவ்வாறு தொழிலதிபர் ஜமுனாலால் பஜாஜின் பேரனான பாரத் நாராயண், தான் எடுத்துச் சென்ற அஸ்தி முறையாக கரைக்கப்பட வேண்டும் என்று கருதித் தன்னிடம் இருந்த கலயத்தை மணி பவனில் ஒப்படைத்தார்.
இதற்கு முன்பு கடந்த 1997 ஆண்டு புவனேஷ்வரில் உள்ள வங்கியின் லாக்கரில் பாதுகாக்கப்பட்ட மற்றொரு அஸ்திக் கலயத்தை அரசு பெற்று, அதை அலகாபாத்தில் உள்ள கங்கை நதியில் கரைத்தது குறிப்பிடத்தக்கது என்று மணிபவன் அறக்கட்டளை நிர்வாகி திருபாய் மேத்தா கூறினார்.