இட ஒதுக்கீடு வழக்கு : மத்திய அரசுக்கு 8 வார கெடு!
புதன், 23 ஜனவரி 2008 (19:36 IST)
இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களைசேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்திய சமூக நலன் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு 8 வாரத்திற்குள் தனது நிலைப்பாட்டைத் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை விரைந்து செயல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. இரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சல் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 வாரக் காலத்திற்குள் தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.