நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 6344 தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரங்களை அமைக்க இந்திய இரயில்வேமுடிவு செய்துள்ளது! இந்த இயந்திரங்களில் ரூபாய்த் தாள்களுடன் வங்கி அட்டைகளையும் பயன்படுத்தமுடியும்.
ரயில் பயணச்சீட்டு முன் பதிவு மையங்களில் நாள்தோரும் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில் முன் பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு வாங்குபவர்களே அதிகம். ஒவ்வொரு நாளும் விற்கப்படும் பயணச்சீட்டுகளில் 90விழுக்காடு முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுக்களாகும்.
"பயணச் சீட்டு மையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. உள்ளூர் ரயிலாக இருந்தாலும், தொலைதூரம் செல்லும் இரயிலாக இருந்தாலும் முன் பதிவில்லாப் பயணச்சீட்டுப் பெறுவதற்குத்தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே கூட்டத்தைக் குறைப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது " என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
"இந்தப் புதிய இயந்திரங்களில் தொடு திரைக் கணிணி இருக்கும். அதில் பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்கள், பெரியவர் மற்றும் சிறியவர்களின் விவரம், தேவைப்படும் பயணச்சீட்டுக்களின் விவரம் போன்ற தகவல்களைத் தரமுடியும். அது தவிர இந்த இயந்திரங்களில் வங்கி அட்டைகளுடன் ரூபாய்த் தாள்களையும் பயன்படுத்த முடியும். பயணச்சீட்டிற்கான தொகையைக் கழித்துக்கொண்டு மீதத் தொகையை இயந்திரம் தரும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
"நாடு முழுவதும் ஓடும் உள்ளூர், வெளியூர், விரைவு மற்றும் அதிவிரைவுரயில்களில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடிப் பேர் பயணிக்கின்றனர். ஆனால் அதில் 7.5 இலட்சம் பயணச்சீட்டுக்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றன" என்று அந்த அதிகாரி கூறினார்.