அமர்நாத் : மூன்றரை லட்சம் பக்தர்கள் வழிபட்டனர்!

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (16:37 IST)
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், அதிகமான பனிப்பொழிவு, நிலச்சரிவு என்று எத்தனையோ தடைகள் ஏற்பட்டும் இமாலய மலைப் பகுதியில் உள்ள புனித அமர்நாத் குகைக் கோயிலிற்கு இந்த ஆண்டு மூன்றரை லட்சம் பக்தர்கள் அங்குள்ள பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனர்!

சரவண பெளர்ணமியை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக நடந்த அமர்நாத் புனித யாத்திரை நேற்று முடிந்தது.

கடைசி நாளான நேற்று ஏராளமான சாதுக்களுடன் ஆயிரம் பக்தர்கள் சென்று சுவாமி அமர்நாத்தை (பனி லிங்கத்தை) வேதகோஷங்கள் முழங்க தரிசித்தனர்.

பதிவு செய்துவிட்டு பஹல்காம் அடிமுகாமில் இருந்து மட்டும் 2,96,869 பக்தர்கள் அமர்நாத் குகைக்கு சென்று வந்தனர் என்றும், இவர்கள் மட்டுமின்றி, மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்தை தரிசித்ததாகவும் அமர்நாத் கோயில் வாரியத்தின் பேச்சாளர் மதன் மாண்ட்டு கூறியுள்ளார்.

ஹெலிகாப்டரில் என்று தரிசித்தவர்களின் எண்ணிக்கை 23,000 என்றும், பஹல்காமில் இருந்து நடந்தே சென்று 1,20,000 பக்தர்கள் தரிசித்தனர் என்றும், பால்டால் வழியாக சென்று பார்த்த பக்தர்களின் எண்ணிக்கை 1.54 லட்சம் என்றும் மதன் மாண்ட்டு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு புனித யாத்திரைககு வந்தவர்களில் 42 பேர் உயிர் நீத்தனர். அவர்களில் பெரும்பலானோர் இயற்கையான காரணங்களினால் மரணமடைந்ததாகவும் மாண்ட்டு கூறியுள்ளார்.

மே 25 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்கிய போது பன்னிரண்டரை அடி உயரமும், 8 அடி சுற்றளவும் கொண்டிருந்த பனி லிங்கம், 35 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து முழுமையாக மறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்