மார்க்சிஸ்ட் மத்திய குழு கூடியது

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (15:47 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்க தனது மத்தியக் குழுவைக் கூட்டியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அணு சக்தி ஒத்துழைப்பு மட்டுமின்றி, மற்றும் பல முக்கிய பிரச்சினைகளில் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சி விடுத்த நிபந்தனையை ஏற்க முடியாது என்று மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துவிட்ட நிலையில் மத்தியக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தருவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

123 ஒப்பந்தத்தை அடுத்து இந்தியாவின் அணு மின் நிலையங்களை சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்கி கூறியது அரசின் முடிவாகவே மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

எனவே இந்த மத்தியக் குழுக் கூட்டத்தில் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விளக்கிக் கொள்வது என்று அக்கட்சி முடிவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
(பாஷா)

வெப்துனியாவைப் படிக்கவும்