அணு ஒப்பந்தம் : இடது கோரிக்கையை அரசு நிராகரிப்பு?

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (10:21 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று இடது சாரிகள் விடுத்த நிபந்தனையை மத்திய நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் எழுப்பிய சந்தேகங்கள் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க மத்திய அரசு ஆளும் கூட்டணி முன் வைத்த தீர்வை இடதுசாரிகள் நிராகரிப்பதாக நேற்று அறிவித்தன.

இடது சாரிக் கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலர் ராஜா, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விஞ்ஞானம், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல், அணு சக்தி ஒத்துழைப்புத் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடரும் என்று கூறினார்.

கபில் சிபல் இவ்வாறு கூறியிருப்பது, இடது சாரிகளின் நிபந்தனையை அரசு நிராகரிப்பது என முடிவெடுத்துள்ளதையே காட்டுகிறது. இதற்கு இடையே வியன்னாவில் நடைபெற உள்ள இந்திய - அணு சக்தி முகமையின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் செல்கிறார்.

அப்போது, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பின் கீழ் இந்தியாவிற்கு என தனித்த கண்காணிப்பு திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்