குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கலாம் மறுப்பு!

Webdunia

வெள்ளி, 22 ஜூன் 2007 (20:01 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்கின்ற 3-ம் அணியின் கோரிக்கை ஏற்க அப்துல் கலாம் மறுத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது!

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எனும் 3-ம் அணியின் தலைவர்கள் இன்று மீண்டும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பிற்குப் 3-ம் அணியின் தலைவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில் கலாம் விருப்பமுடையவராகத் தெரியவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம். கான், "குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதில்லை என்று கலாம் மறுத்துவிட்டார். தன்னைச் சந்தித்த 3-ம் அணித் தலைவர்களிடம் கலாம் இதனைத் தெரிவித்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.

"குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட தான் விரும்பவில்லை என்பதை குடியரசுத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். குடியரசுத் தலைவர் அலுவலகத்தை அரசியல் சர்ச்சைக்கு உட்படுத்தப்படுவதை அவர் விரும்பவில்லை" என்று எஸ்.எம். கான் கூறியுள்ளார்.

எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளரும், குடியரசு துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத்தும் நேரடியாக மோதுவது உறுதியாகிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்