எம்.பி.க்கள் மீதான புகார்களை விசாரிக்க தனிக் குழு!

வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துதல் போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க நாடாளுமன்ற தனிக் குழு அமைக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தனிக் குழு இன்னும் இரண்டே நாட்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மனைவியின் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி வேறு பெண்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கடாரா கைது செய்யப்பட்டார். இதுபோன்று வேறு சில உறுப்பினர்களும் ஆள் கடத்தல் வேலையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரயில்வே பாஸ், தங்கும் இடம், கடவுச் சீட்டு போன்ற உரிமைகளை எதிர்காலத்தில் தவறாக பயன்படுத்துவதில் இருந்து தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அவர்களுக்கான நடத்தை விதிமுறைகளை உருவாக்குவதற்காக நாடாளுமன்ற குழு அமைக்கப்படும்.

தவறான செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்களையும் அக்குழு விசாரிக்கும். குழுவில் இடம்பெறுவோரின் பெயர்கள் இரண்டு நாளில் அறிவிக்கப்படும். அந்த குழு விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் என்றார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இது போன்ற குற்றங்களை பத்திரிக்கை, நாளிதழ்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்றும் சோம்நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்