பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதியுதவியை முடக்குகிறது அமெரிக்கா!

செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (14:10 IST)
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் அமெரிக்க நிதி உதவிகள் அனைத்தையும் முடக்கிவைக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.யும், அயலுறவுத் துறை விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி உறுப்பினருமான டெட் போ இந்த மசோதவை தாக்கல் செய்தார்.

ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது முதல் பாகிஸ்தான் நம்பிக்கையற்ற வகையிலும், அமெரிக்காவுக்கு ஆபத்தாகவும் இருந்துவருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே பாகிஸ்தானுக்கான உதவிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்த டெட் போ கூறினார்.

இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நிதிஉதவிகளும் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனினும் அணுஆயுதங்களை பாதுகாப்பதற்காக வழங்கப்படும் நிதிஉதவி மட்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்