648 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைப்பு

வெள்ளி, 2 ஜூலை 2010 (17:47 IST)
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகளின் பட்டியலை அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள நிலையில்,648 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளும் இது தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பட்டியலை பாகிஸ்தான் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் பரஸ்பரம் கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அளித்துள்ள பட்டியலின்படி, 648 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் கடந்த் ஜனவரி 1 ஆம் தேதி இந்தியா அளித்த பட்டியலின்படி, 633 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியா தரப்பில் ஜூலை 1 ஆம் தேதி அளிக்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியல் இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்