இந்திய மாணவர்கள் கொலை தொடர்பாக 3 பேர் கைது!

வெள்ளி, 23 மே 2008 (11:17 IST)
அமெரிக்காவில் உள்ள லூஸியானா மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 2 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 3 ஆப்பிரிக்க- அமெரிக்க இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சந்திரசேகர ரெட்டி கொம்மா, கிரண்குமார் அல்லம் ஆகியோர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பல்கலைக்கழக வளாக‌த்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பரபரப்பான இந்த கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எஃப்.பி.ஐ. உள்ளிட்ட சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலைகளை செய்ததாக கருதப்படும் இரண்டு ஆப்பிரிக்க- அமெரிக்கர்களின் படங்களை இந்த விசாரணைப் படை வெளியிட்டது.

இந்நிலையில் மைக்கேல் ஜெர்மைன் லூயிஸ், கேஸி கேதர்ஸ் என்ற இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரான டெவின் ஜாமெல் பார்க்கரை புதனன்று காவல்துறை கைது செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்