இந்திய நல்லுறவுக்கு காஷ்மீர் தீர்வே அடிப்படை: பாகிஸ்தான்!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (17:07 IST)
இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்திற்கான அமைச்சர் ஷமான் கய்ரா கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் யுசுப் ரஷா கிலானி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 23 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்திற்கான அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள ஃகமார் உஸ் ஷமான் கய்ரா கூறுகையில், "இந்தியாவுடன் வர்த்தகத்தொடர்பு, மக்கள் நல்லுறவினை நாங்கள் விரும்புகிறோம். மக்களிடையே நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். காஷ்மீர் விவகாரம் சாதாரணமானது. இதனை ஒருபக்கமாக வைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அதற்கு தீர்வுகாண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றார்.

"அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் இந்த சகாப்தத்தில், இந்தியாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நாடும் செயல்பட முடியாது. இந்த பாகிஸ்தானின் புதிய அரசு முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் வழிமுறைகைளை பின்பற்றி, காஷ்மீரவிவகாரத்திற்கு தீர்வுகாணும்.

கடந்த 1990ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய 'காஷ்மீர் கொள்கை' அப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால், அதன்பிறகு வந்த அரசுகள் எல்லாம் அந்த கொள்கையைத்தான் பின்பற்றினர்" என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தானின் அயலுறவு அமைச்சராகவும், பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ள உஷைன் ஹக்கானி கூறுகையில், "தனிப்பட்ட செயல்பாடுகளை விரும்பவில்லை இந்தியாவுடன் இயல்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு புதிய அரசு முக்கியத்துவம் அளிக்கும்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்