வெர்ஜீனியா, மேரிலாந்து, வாஷிங்டன் டி.சி. ஆகிய மாநிலங்களில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றதன் மூலம், ஹிலாரியை வீழ்த்தி முன்னிலை பெற்றார்.
முன்னதாகச் சனிக்கிழமை நடந்த வேட்பாளர் தேர்தலில் நெப்ராஸ்கா, வாஷிங்டன், லூசியானா ஆகிய மாநிலங்களில் ஒபாமா வெற்றி பெற்றார். அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை மெயின் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலிலும் ஒபாமா வெற்றி பெற்றார்.
தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவரும் ஒபாமாவுக்கு இதுவரை 1,212 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் ஹிலாரிக்கு 1,191 பிரதிநிதிகளின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் 2,025 பிரநிதிகளின் ஆதரவு இருப்பவர் மட்டுமே வேட்பாளர் தேர்வில் வெற்றிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓகியோ, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், மார்ச் 4 ஆம் தேதி அங்கு நடக்கவிருக்கும் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தல்களின் முடிவில், ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ஜனநாயக கட்சியின் மாநாட்டில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்யப்படுவார்.
இல்லினாய்ஸ் செனட்டராக இருந்துவரும் கருப்பினத்தவரான ஒபாமா தொடர்ந்து எட்டு மாநிலங்களில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரியை விட முன்னிலையில் இருந்து வருகிறார். இதர மாநிலங்களிலும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறிவருகிறார்.
இதற்கிடையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் ஜான் மெக்கைன் முன்னிலையில் இருந்து வருகிறார். அவருக்குப் போட்டியாளரான மைக் ஹுக்காபீ மூன்று மாநிலங்களில் தோல்வி அடைந்துவிட்டார்.