மசூதிக்குள் புகுந்தது ராணுவம்: 40 தீவிரவாதிகள் பலி

Webdunia

செவ்வாய், 10 ஜூலை 2007 (11:39 IST)
இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள லால் மசூதிக்குள் இன்று காலை ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பாதுகாப்பு படை வீரர்கள், 40 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்த்தில் உள்ள லால் மசூதியில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும்,ராணுவத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகள் சரணடையாவிட்டால் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என அந்நாட்டு அதிபர் முஷாரப் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தீவிரவாதிகள் மசூதியை விட்டு வெளியேறவில்லை.

இதையடுத்து,தீவிரவாதிகளை பிடிக்க ராணுவம் கடந்த சில நாட்களாக மசூதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது.தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் பலர் பலியாகினர்.

இந்நிலையில் மசூதியை விட்டு தீவிரவாதிகள் வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்வோம் என அதிபர் முஷாரப் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து இன்று காலை ராணுவத்தினர் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இருதரப்பினரும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த சண்டையில் இதுவரை 3 பாதுகாப்பு படை வீரர்கள்,40 தீவிரவாதிகள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மசூதிக்குள் பதுங்கி இருக்கும் மதகுரு ரஷீத் காஜியை பிடிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்