மலேசிய இந்தியர்கள் போராட்டம் எதற்காக?

தொழில் நடத்த, கல்வி கற்க தமிழர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக உள்ளனர் என்றும், அவர்கள் வறுமை நிலையில் வாடுகின்றனர் என்றும் ஹின்டிர·ப் கூறுகிறது.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் மலேசிய இந்தியர்களை அந்நாட்டு அரசு பாதித்துள்ளது. கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி பதாங் ஜாவா என்ற இடத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான மகாமாரியம்மன் கோயிலை அந்நாட்டு அரசு இடித்துத் தள்ளியது. இதற்கு மலேசிய இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2006 ஆம் ஆண்டில் கூட இவ்வாறு பல இடங்களில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதாக இந்து அமெரிக்கன் ·பவுண்டேஷன் எனும் அமைப்பு வெளியிட்ட மனித உரிமை அறிக்கை கூறுகிறது.

இதுமட்டுமல்லாமல், சாதாரண கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் கூட அந்நாட்டு அரசு அனுமதி அளிப்பதில்லை. மாறாக, அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு எதிராக அந்நாட்டு தூதரகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கின்றது. மலேசிய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவோர் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது, கோயிலிற்குள் கூடினால் அந்தக் கோயிலே இடித்துத் தள்ளப்படும் என்று அச்சுறுத்துவது, கோயிலை மூடிவிட்டு கோயிலிற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் அடைப்பது, சாதாரணமாகக் கூடினாலும் அந்த இடத்தில் ஆயுதம் தாங்கிய காவலர்களை குவித்து அச்சுறுத்துவது என மலேசிய இந்தியர்களை பல முனைகளிலும் மலேசிய அரசு மிரட்டி வந்துள்ளது.

இப்படி எல்லாவிதத்திலும் பாதிப்பிற்குள்ளான மலேசிய இந்தியர்கள், தங்களின் நிலைக்குக் காரணம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக தங்களை மலேயாவிற்கு அழைத்து வந்த பிரிட்டிஷ் அரசு, விடுதலைக்குப் பின்னர் மலேசியாவில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் விட்டுச் சென்றதே காரணம் என்று கூறி அந்நாட்டு அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தாங்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மலேசியத் தமிழர்களின் நிலையை ஆராய பிரிட்டிஷ் அரசியால் ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மனுவை அளிக்கவே கோலாலம்பூரில் நேற்று கூடினர். மலேசியா விடுதலை பெற்றதக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய பேரணி அது என்று கூறப்படுகின்றது.

இதுவரை மலேசியாவிற்குள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த அந்நாடு வாழ் இந்தியர்களின் உரிமைக் குரல் கோலாலம்பூர் பேரணி மூலம் உலகத்தின் காதுகளுக்கு எட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்