நிலவில் மனிதன் முதன்முதலாக அடிவைத்து நடந்த நாள் இன்று.

Webdunia

வெள்ளி, 20 ஜூலை 2007 (12:57 IST)
webdunia photoWD
1969ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்கா அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற விண்வெளி நிபுணர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று பேர் 4 நாட்கள் பயணம் செய்து நிலவை அடைந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் தனி விண் வாகனத்தின் மூலம் விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவிற்குச் சென்று இறங்கினர்.

1969ஆம் ஜூலை மாதம் 20ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்து நடந்த முதல் மனிதர் ஆனார். விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க சாதனை இந்நாளில் படைக்கப்பட்டது.

webdunia photoWD
தங்களது விண் வாகனத்தில் நிலவில் இறங்கி கால் பதித்து சிறிது தூரம் நடந்து ஒரு புது அனுபவத்தைப் பெற்றனர் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும். அவர்கள் மட்டுமல்ல அந்த செய்தியை அறிந்த உலகத்திற்கும் அது ஒரு புது அனுபவமே.

எப்பொழுது கண்டாலும் மனிதனின் மனதிற்கு இதமான அனுபவத்தைத் தரும் நிலவில் மனிதன் கால் பதித்து நடந்த அந்த விஞ்ஞான சாதனை, அதன்பிறகு இன்று வரை நடந்து வரும் எல்லா விண்வெளி ஆய்வுகளுக்கும் ஒரு முன்னோடியாக அமைந்தது.

நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட "நிலா கல்" உலகம் முழுவதும் வலம் வந்தது. உலக மக்கள் அனைவரும் தாங்கள் வாழும் பூமியை நாளும் சுற்றி வரும் நிலவின் ஓர் அங்கத்தை ஆச்சரியத்துடன் கண்டனர்.

நிலவில் என்னென்ன கனிமங்கள் இருக்கும்? அது எப்படி நமது பொருளாதாரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படும் என்கின்ற திட்டங்களோடுதாடுதான் நிலவை நோக்கி அந்த விஞ்ஞான முயற்சி திட்டமிடப்பட்டதாம்.

அதே நேரத்தில் ரஷ்யாவும் சயூஸ் என்கின்ற தனது ஆளில்லா விண்கலத்தை நிலவின் மற்றொரு பகுதியில் இறக்கி அங்கு ஆய்வு நடத்திவிட்டு சில விவரங்களுடன் திரும்பியது.

இந்த முதன்மை பயணத்திற்குப் பிறகு பல முறை அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் நிலவிற்கு அனுப்பப்பட்டனர். நிலவில் அவர்கள் கார் ஓட்டினர். நீண்ட நேரம் இருந்தனர். பல ஆராய்ச்சிகளை செய்தனர். பின் மீண்டும் நான்கு நாட்கள் பயணம் செய்து புவியை அடைந்தனர்.

நிலவு பயணத்தினால் பெரிதாக எந்த பயனும் கிட்டாததைக் கண்ட நாசா தனது நிலவுத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆனால் இன்று நிலவை ஆய்வு செய்யும் முயற்சியை முன்னேறி வரும் ஒரு மூன்றாவது நாடான இந்தியா மேற்கொண்டு வருகிறது.

துருவ செயற்கைக் கோள்களை புவி சுழற்சி பாதையில் செலுத்தும் பி.எஸ்.எல்.வி. விண்கலத்தை பயன்படுத்தி 2008ஆம் ஆண்டில் முதல் ஆய்வு விண் ஓடத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்த உள்ளது.

சந்திராயன் எனும் இந்த நிலவு ஆய்வுத் திட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற விண்ணாய்வில் முதன்மையாகத் திகழும் நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்திய விண்வெளி ஆய்வோடு ஒப்பிடுகையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் பெரும் அளவிற்கு முன்னேறிய நாடுகள்தான். ஆயினும் அவர்களுடைய மூளைக்கு புலப்படாத சில விஷயங்கள் இந்திய மூளைக்குப் புலப்படுவதே அவர்கள் நம் திட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டதற்கு காரணமாகும்.

குறிப்பாக ஒன்று சொல்லப்படுகிறது. உலகத்தின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், இன்றுள்ள நிலக்கரி, எண்ணெய், எரிவாயு ஏன் யுரேனியம் போன்ற அணு மூலப் பொருட்களும் எதிர்கால எரிசக்தித் தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதால் குறைந்த எரிபொருளில் அதிக எரி சக்தியை உற்பத்தி செய்யும் ஆய்வில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு பக்கத்தில் ஈட்டர் என்று அழைக்கப்படும் இன்டர்நேஷனல் தெர்மல் எனர்ஜி ரியாக்டர் எனும் ஒளி அணுக்களை பிளந்து அதில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றும் மாபெரும் திட்டத்தை முன்னேறிய நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இதில் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மற்றொருபுறத்தில் ஹீலியம் (H3) எனும் ஹைட்ரஜன் அணுக்களை ஒன்றிணைத்து பிளந்து அதில் இருந்து பெறப்படும் அணு சக்தியை அனல் சக்தியாக்கி மின்சாரத்தை தயாரித்திடும் ஆய்வும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஹீலியம் மூலப்பொருள் சந்திரனில் ஏராளமாகக் கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது. இந்த எரிபொருளைக் கொண்டு மிகக் குறைந்த அளவிலேயே மிக மிக அதிக அளவிற்கு மின் சக்தியை உற்பத்தி செய்திட முடியும். அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆய்வு முயற்சி ஒரு பக்கம் நடப்பதாகவும், மறுபக்கத்தில் நிலவில் இருந்து ஹீலிய மூலப்பொருளைக் கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

webdunia photoWD
ஆக, நிலவைக் காட்டி குழந்தைக்கு சோர் ஊட்டும் காலத்தில் இருந்து நிலவில் கால் பதித்து தனது விஞ்ஞான சாதனைக்காக மானுடன் புளங்காகிதம் அடைந்த காலத்தையும் தாண்டி இன்று புவியின் எரிசக்தித் தேவையை நிவர்த்தி செய்ய அதே அழகு நிலவு உதவப்போகிறது என்று கேட்கும் போது என்னே விநோதம் என்றே எண்ணத் தோன்றுகிறது

குழந்தைகளை மட்டும் அல்ல விஞ்ஞானத்தையும் தொடர்ந்து கவரும் தன்னிகரற்ற ஆற்றலை என்றென்னைக்கும் பெற்றிருக்கும்..... நிலா..... நிலா.....