ரூபாய் மதிப்பு குறைவதை ரிசர்வ் வங்கி தடுக்கவில்லை!

திங்கள், 19 மே 2008 (16:17 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதை, ரிசர்வ் வங்கி தடுக்கவில்லை என்று ஹெச்.எஸ்.பி.சி வங்கி கூறியுள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வருடம் 12 விழுக்காடுவரை அதிகரித்தது. இதற்கு நேர்மாறாக கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது.

டாலரின் மதிப்பு சரிந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது. ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதிகப்படியான டாலரை சந்தையில் இருந்து வாங்கியது.

ஆனால் டாலரின் மதிப்புக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும் போது, ரிசர்வ் வங்கி தலையிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஹாங்காய் அண்ட சாங்காய் பாங்கிங் கார்ப்பரேஷனைச் (ஹெச்.எஸ்.பி.சி வங்கி) சேர்ந்த தலைமை பொருளாதார நிபுணர் ராபர்ட் பிரர்வான்டிஸ்போர்டி கூறியிருப்பதாவது.

இந்த நிதி ஆண்டில் (2008-09) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆறு விழுக்காடு குறைந்து, 1 டாலரின் மதிப்பு ரூ.43 ஆக உயர்ந்துள்ளது. நுகர்வோர் குறியீட்டு எண் அதிகரித்து, இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவதை, ரிசர்வ் வங்கி தலையிட்டு தடுத்து நிறுத்தவில்லை.

ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பு குறைவதை தடுத்து நிறுத்துவதை விட, ரூபாயின் மதிப்பு உயர்வதை தடுத்து நிறுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது.

2006 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறி, ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

இந்த வருடம் பிப்ரவரி மாத துவக்கித்தில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.40 பைசாவாக இருந்தது. இதிலிருந்து 7 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் ஏற்றுமதி பாதிக்காமல் இருந்தால்தான், பொருளாதார உதவிகரமாக இருக்கும் என்று கருதுகின்றனர். ரூபாயின் மதிப்பு மேலும் குறையாமல், இதே நிலையிலேயே இருக்கும் என்று அந்நியச் செலவாணி நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சுசித்ரா மேத்தா கூறுகையில், செப்டம்பர் மாத இறுதியில் டாலரின் மதிப்பு ரூ.42.50 பைசாவாக உயர்ந்துவிடும் என கருதுகின்றோம் என்று தெரிவித்தார்.

நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், ரூபாயின் மதிப்பு மீண்டும் அதிகரித்து, இந்த நிதி ஆண்டின் இறுதியில் 1 டாலரின் மதிப்பு ரூ.36 என்ற அளவை எட்டும் என்று ஹெச்.எஸ்.பி.சி வங்கி கணித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்