சிறு தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கை: அமைச்சர்!

செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:17 IST)
குறு,சிறு,நடுத்தர தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னையில் நேற்று மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிட்கோ கிளை மேலாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமையேற்று ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசியதாவது:

தமிழகத்தில் பெரிய தொழில்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வேலைபார்க்கின்றனர். சிறு, குறு, நடுத்தர தொழில்களில் 40 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். தமிழக அரசு விரைவில் குறு,சிறு, நடுத்தர தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கையை அறிவிக்க உள்ளது.

பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 28,188 பேருக்கு ரூ117.3 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.150 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரை 10,751 பேருக்கு ரூ.57.98 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறு தொழில்களுக்கு குழும அடிப்படையில் (கிளட்சர்) உதவி செய்ய மத்திய அரசின் ஸ்பூருட்டி திட்டத்தின் கீழ் சிவகங்கை,பெரியகுளம்,சேலம்,வேலூர்,பட்டுக்கோட்டை,கடலூர் ஆகிய நகரங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

குறு, சிறு தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவையில் கிரைண்டர் உற்பத்தி குழுமத்திற்கு ரூ.2.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் அங்கு சிறப்பு செயலாக்க முகமை திட்டம் மூலம் ரூ.56.90 கோடியில் சிறு கருவி மையம் அமைக்கபட உள்ளது. சிவகாசியில் தீப்பெட்டி குழும மேம்பாட்டுக்கு ரூ.9 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்