ரூபாய் மதிப்பு உயர்வு : நாஸ்காம் வேதனை!

Webdunia

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (13:49 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்று நாஸ்காம் வருத்தப்பட்டுள்ளது!

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக், ஜனவரியில் இருந்து ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், இது ஐ.டி., ஐடெஸ் ஏற்றுமதி வருவாயை பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ரூபாய் மதிப்பு உயர்வால் நாணய மாற்றலில் ஏற்படும் இழப்பு ஐ.டி. நிறுவனங்களால் தாங்க இயலாது என்றும், அவைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இது நல்லதல்ல என்றும் கூறினார்.

ஐ.டி. ஏற்றுமதியாளர்களின் கவலைகளை போக்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கிரண் கார்னிக், ஆனால் அரசாங்கத்தை இதில் கவனம் செலுத்துமாறு செய்வது மிகக் கடினமாய் உள்ளது என்று கூறியுள்ளார்.

வேகமாக வளர்ந்துவரும் ஐ.டி., ஐடெஸ் துறையில் தற்பொழுது 5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனங்களின் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கு மேலும் ஒன்றரை லட்சம் பேரும், ஐ.டி., ஐடெஸ் துறையில் மேலும் 2 லட்சம் பேரும் பணி வாய்ப்பை பெறும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்