இ.பி.எப். வட்டி 8.5 சதவீதத்தைத் தாண்டும்; தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம்

வியாழன், 10 அக்டோபர் 2013 (20:04 IST)
தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி இந்த ஆண்டு 8.5 சதவீதத்திற்கு அதிகமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சந்தாதாரர்களுக்கு 2012 - 2013 ஆம் ஆண்டில் 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதைவிட அதிகமாக அளிக்கப்படும் என தெரிகிறது.
FILE

தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் டிரஸ்டிகள் அடங்கிய மத்திய வாரிய கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் நடக்க இருக்கிறது. இதில் நிதி மற்றம் முதலீட்டு கமிட்டி மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டிதான், இ.பி.எப். முதலீட்டுக்கு வட்டி அளிப்பது குறித்து பரிந்துரை செய்யும். அதன் பின் டிரஸ்டிகளின் மத்திய வாரியம் முடிவு செய்யும்.

பொதுவாக நிதியாண்டின் துவக்கத்தில் இ.பி.எப். வட்டி எவ்வளவு என்பது முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால், பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்தாண்டுக்கான வட்டி குறித்து தீபாவளிக்கு முன்பாக அறிவிக்க வேண்டும். இந்த ஆண்டு, வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீதத்திற்கு மேல் சற்றே கூடுதலாக வட்டி அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு, அதிக வட்டி அளித்தால் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு எவ்வித பற்றாக்குறையோ, மிகுதியோ ஏற்படாது. கடந்த 2010 - 2011 ஆம் ஆண்டில் இ.பி.எப். முதலீட்டுக்கு 9.5 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்