சிறப்பு சுரண்டல் மண்டலங்கள்-மேதா பட்கர்

சனி, 3 ஜனவரி 2009 (10:14 IST)
காஞ்சிபுரம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பொதுமக்களின் வாழ்வை சீரழிக்க வந்த “சிறப்பு சுரண்டல் மண்டலங்கள” என்று மும்பை மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், சமூக சேவகியுமான மேதா பட்கர் கூறினார்.

ஸ்ரீ பெரும்புதூர் தாலுகாவில் உள்ள ஒரகடம்- சென்னக்குப்பம் கிராமங்களில் சிப்காட் நிறுவனம் சார்பில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக, சென்னக்குப்பம் கிராமத்தில் தலித் மக்களின் விளை நிலம், பூமிதான இயக்கத்தின்போது வழங்கப்பட்ட நிலம், பள்ளிக்கூடம், கோயில், குடிநீர் ஆதாரங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரகடம்-சென்னக்குப்பம் கிராமப் பாதுகாப்புக் குழு, சிறப்புப் பொருளாதார மண்டல எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னக்குப்பம் கிராமத்தில் சென்ற வெள்ளிக்கிழமை இரவு கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பிரபல சமூக சேவகர் மேதாபட்கர் பேசம் போது, சென்னக்குப்பம் கிராமத்தை சுற்றிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட், மேற்கு வங்கத்தில் நந்திகிராம், பெங்களூர், ஒரிசாவில் பாஸ்கோ இரும்பாலை உள்ளிட்ட திட்டங்களால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு மக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்ததால், அவை நிறுத்தப்பட்டு விட்டன.

வேலைவாய்ப்பு, நிலத்துக்கு அதிக இழப்பீடு தரப்படும் என்ற போலி வாக்குறுதிகளை கண்டு மக்கள் ஏமாறக்கூடாது. அரசாங்கமே சட்டவிரோத செயலுக்கு துணைபோகிறது.

மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதின் மூலம் அரசியல் சட்டத்துக்கே எதிராக செயல்படுகின்றனர். நமது மக்களிடம் அனைத்து வரிகளையும் தவறாமல் வசூலிக்கும் அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை அள்ளி வீசுகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பெரிய நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. அந்நிலை நமது நாட்டிலும் ஏற்பட விடக்கூடாது.

பக்ராநங்கல் முதல் நர்மதா நதி அணைக்கட்டு திட்டங்களால் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை மறுவாழ்வே கிடைக்கவில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக பூமிதான நிலங்களையும் கையகப்படுத்த நினைப்பது வெட்கக்கேடானது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் நமது மக்களுக்கு எந்த பயனுமில்லை. அங்கு வேலைக்குச் சென்றால் எந்த பணிப் பாதுகாப்பும் இல்லை. இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் அவை கொண்டு வரப்படவில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களை கையகப்படுத்தும்போது, உள்ளாட்சி அமைப்புகள் தெரிவிக்கும் ஆட்சேபனையைக் கூட கருத்தில் கொள்ளாமல் அவற்றின் அதிகாரங்களை அரசே நசுக்கி வருகிறது. அரசின் சட்டவிரோதப் போக்கை எதிர்க்க அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரள வேண்டும் என்று மேதாபட்கர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்