'ஆன் லைன்' வர்த்தகத்தால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி!

திங்கள், 13 அக்டோபர் 2008 (12:45 IST)
மக்காச்சோளத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இணைத்ததால் அதன் விலதற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. விளைச்சல் நன்றாக இருந்தாலும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி, பவானி, சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளத்தை தனியான பயிராகவும் வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களின் ஊடுபயிராகவும் நடவு செய்துள்ளனர். இந்த மக்காச்சோளம் தற்போது நன்கு விளைந்து அறுவடையும் நடந்து வருகிறது.

webdunia photoWD
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் மக்காசோளம் பெரிய நோய்களால் பாதிக்கப்படாமல் அதிக விளைச்சல் கொடுத்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் தற்போது மக்காச்சோளம் தங்கம் விலைபோல் ஒவ்வொறு நாளும் ஒவ்வொறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.1200 க்கு விற்பனையான மக்காச்சோளம் தற்போது குவிண்டால் ஒன்று ரூ.750 க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்காச்சோளத்தை ஆன்லைன் வர்த்தகத்திற்கு உட்படுத்தப்பட்டதே என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

ஒரு ஏக்கர் ஒன்றுக்கு நடவு, பராமரிப்பு மற்றும் உரம் என ரூ.10 ஆயிரம் செலவாகிறது. தற்போது அறுவடைக்கு இயந்திரம் வந்ததால் அறுவடை செலவு விவசாயிகளுக்கு கனிசமாக குறைந்துள்ளது. ஆனால் விளைச்சல் செழிப்பாக இருந்தும் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது மக்காச்சோள விவசாயிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்காச்சோளத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதே சமயம் கோழி பண்ணை உரிமையாளர்கள் மக்காச்சோளத்திற்கு உரிய விலை கொடுத்து வாங்க முன்வரவேண்டும் என்றும் கூறுகின்றனர்.