அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்தது!

திங்கள், 6 அக்டோபர் 2008 (15:14 IST)
நியுயார்க்: அமெரிக்க பங்குச் சந்தைகளில் பதிவு செய்துள்ள இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு, கடந்த (அக்டோபர் 5 ஆம் தேதியுடன் முடிவடைந்த) வாரத்தில் மட்டும் 10 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர் குறைந்து உள்ளது.

இதில் இன்ஃபோசியஸ் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் இரண்டு பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

நியுயார்க் பங்குச் சந்தையில் 16 இந்திய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள பங்குளின் மொத்த மதிப்பு 88.7 பில்லியன் டாலரில் இருந்து 78.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இதற்கு காரணம் அமெரிக்க பங்குச் சந்தைகளில் எல்லா பங்குகளின் விலைகள் சரிந்ததும், அத்துடன் பொதுவான நெருக்கடியும்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நியுயார்க் பங்கு பதிவு செய்துள்ள இந்திய நிறுவனங்களில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்ப துறையின் சேவை நிறுவனங்களின் ஆறு நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளின் மதிப்பு நான்கு பில்லியன் டாலருக்கும் அதிகமாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் இணைய தள சேவையில் உள்ள சிபி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 3 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

விப்ரோ பங்கு மதிப்பு 1.69 பில்லியன் டாலர், சத்யம் கம்ப்யூட்டர் பங்கு மதிப்பு 938 மில்லியன் டாலர், பட்னி கம்ப்யூட்டர் பங்கு மதிப்பு 72 மில்லியன் டாலர் குறைந்துள்ளது.

இதே போல் ஜென்பேக்ட், டபிள்யூ.என்.எஸ்., இ.எக்ஸ்.எல். சர்வீஸ், ரீடிப் டாட் காம் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு 4 முதல் 12 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்கு மதிப்பு 8.6%, ஹெச்.டி.எப்.சி. வங்கியின் பங்கு மதிப்பு 6% குறைந்துள்ளது.

டாடா மோட்டார் பங்கு மதிப்பு 489 மில்லியன் டாலர், டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்கு மதிப்பு 266 மில்லியன் டாலர் குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்