உலகமயமாக்கத்தால் அடித்தள மக்களுக்கு வாய்ப்பு!

சனி, 27 செப்டம்பர் 2008 (12:53 IST)
உலகமயமாக்கத்தால் அடித்தள மக்களுக்கு வாய்ப்புகளும், பொருள் வளமும் தெரிவதால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் ஆர். கிறிஸ்துதாஸ் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் சார்பில் வெள்ளிக்கிழமை உலகமயமாக்களில் அடித்தள மக்களுக்கான சாதகங்கள்' என்பது குறித்து உரையாற்றினார்.

அப்போது அவர், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்றவைகளால் எல்லோரும் எல்லாமும் பெற முடியுமா என்பதற்கு, முடியும் என்பதுதான் பதில். தற்போதைய நிலையில் எதுவுமே இல்லாத, எதுவுமே கிடைக்காத அடித்தள மக்கள், இவற்றால் இழப்பதற்கு எதுவுமில்லை.

அடித்தள மக்களிடம் இல்லாத நிலம், கிடைக்காத தண்ணீர், பெற முடியாத வேலைவாய்ப்பு போன்றவை உலகமயமாக்களால் பறிபோகும் நிலை ஏற்பட்டாது. இதனால் இவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இவை உடையவர்களுக்குதான் பாதிப்பு ஏற்படும்.

எனவே, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலைக்கு அடித்தள மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்மூலம் புதிய வாய்ப்புகளும், பொருள் வளமும் வரும் எனத் தெரிகிறது. எனவே, அதை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

உலகமயமாக்கலில் பயன்பெற விரும்புவோர், அதன்மூலம் அடித்தள மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறிக்க, அதை எதிர்க்கும் மனப் போக்கை அவர்களிடம் உருவாக்கி வருகிறார்களா என்ற ஐயப்பாடும் உண்டு.

எனவே, எதிரிக்கு எதிரியை நண்பராக்கிக் கொள்வதுபோல், உலகமயமாக்கலை நாம் ஏற்றுக் கொண்டால் என்ன என்ற மாற்று சிந்தனை உருவாகி உள்ளது.

உலகமயமாக்களால் நம் நாட்டுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதிப்பார்வை கிடையாது. அந்த நிறுவனங்களில் பெண்களுக்கு உரிய பங்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் போக்கும் உண்டு. அப்படிப்பட்ட நிறுவனங்களில் அடித்தள மக்களுக்கு உரிய நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இதுகுறித்து நாம் சிந்திக்க வேண்டும்'' என்று கிறிஸ்துதாஸ் காந்தி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்