பங்குச் சந்தைக்கு உதவி இல்லை- புதின்!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (17:04 IST)
பங்குச் சந்தைக்கு உதவுவதற்காக அரசின் இருப்பு நிதி அல்லது தேசிய வளர்ச்சி நிதியை, நிதி அமைச்சகம் பயன்படுத்தாது என்று ரஷிய பிரமதர் விளாதிமிர் புதின் தெரிவித்தார்.

அமெரிக்க நிதி, முதலீட்டு நிறுவனங்களின் நெருக்கடியால், பல நாட்டு பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பங்கு விலைகள் குறைந்து வருகிறது. பங்குச் சந்தைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட, அரசு மற்றும் ரிசர்வ் வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் ரஷிய பிரதமர் பங்குச் சந்தைக்கு உதவிட நாட்டின் இருப்பு நிதி அல்லது வளர்ச்சி நிதியை பயன்படுத்தாது என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருங்கடல் அருகே உள்ள சோஷி என்ற நகரில் புதின், அயல்நாட்டு வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசும் போது, தற்போதைய நிலைமைக்கு ரஷிய நிதி அமைச்சகம் இருப்பு நிதி, அல்லது வளர்ச்சி நிதியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கவில்லை என்று புதின் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், அயல்நாட்டு வர்த்தகர்களுக்கு, ரஷியா அதன் சந்தையை மூடவில்லை. எங்கள் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ரஷியா பொருளாதார ஒத்துழைப்பு விடயங்களில், அரசியல் ரீதியாக எவ்வித முடிவையும் எடுக்காது என்று தெரிவித்தார்.

ரஷியாவின் நிதி சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று ரஷியாவின் இரண்டு முக்கியமான பங்குச் சந்தைகளிலும், பங்கு வர்த்தகம் தொடரலாம் என்று அனுமதி வழங்கியது.

ரஷியாவின் நிதி சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான பெடரல் பைனான்ஸியல் மார்க்கெட் சரிவீஸ் (Federal Financial Markets Service ) ரஷியாவின் பங்குச் சந்தைகளான ஆர்.டி.எஸ் (RTS) மற்றும் எம்.ஐ.சி.இ.எக்ஸ் (MICEX) களில் புதன் கிழமையன்று பங்கு வர்த்தகத்திற்கு தடை விதித்தது.

இதற்கு காரணம் உலக அளவிலான நிதி நெருக்கடியின் காரணமாக, இந்த இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு சரிந்தது.

ரஷிய நிதிச் சந்தையில் பணப்புழக்க நெருக்கடியை தவிர்ப்பதற்காக, ரஷிய அரசு வங்கிகளான சிபர்பாங்க், (Sberbank), வி.டி.பி, (VTB) ஹாஜ்புரோம் பாங்க் (Gazprombank) ஆகியவைகளுக்கு 44 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக, ரஷிய அரசு புதன் கிழமை அறிவித்தது.

ரஷிய அரசு சென்ற பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று, நெருக்கடிகால உதவி நிதியை (Stabilisation Fund) பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற பாதிப்பை ஈடுகட்டும் நிதியாக மாற்றியது.

அதே போல் முந்தைய தேசிய வளர்ச்சி நிதியை ஓய்வுகால நிதிக்கு உதவி செய்யும் நிதியாக மாற்றியது.

வெப்துனியாவைப் படிக்கவும்