சீனாவுக்கு எல்லை வழியாக ஏற்றுமதி திருப்தி!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:49 IST)
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை வழியாக நடக்கும் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது நாது லா கணவாய். இது சீன எல்லை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இரு நாடுகளின் சாலை வழியான ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்திற்காக எல்லைச் சாவடி அண்மையில் திறக்கப்பட்டது.

நாது லா எல்லைச் சாவடி வழியாக சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில் துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்து நாது லா சாவடி வழியாக 7.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த எல்லா சாவடி வழியாக ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் மே 19ஆம் தேதியில் இருந்து அனுமதிக்கப்படுகிறது. ஜூன் மாதம் வரை எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த இரண்டரை மாதங்களில் மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாது லா வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து அதிக அளவிற்கு சால்வை, போர்வை, பாத்திரங்கள், தாமிர பொருட்கள் ஏற்றுமதி ஆகி உள்ளன. சீனாவைச் சேர்ந்த திபெத் தன் ஆட்சி பிரதேசத்தில் உள்ளவர்கள் இந்த பொருட்களை அதிகம் விரும்புகின்றனர். இதனால் இந்தியாவில் இருந்து, சீன இறக்குமதியாளர்கள் இவற்றை அதிக அளவு இறக்குமதி செய்வதாக சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சமையல் எண்ணெய், டப்பாவில் அடைக்கப்பட்ட உணவு, தேயிலை, சிகரெட், காபி ஆகியவற்றையும் சீன இறக்குமதியாளர்கள் அதிக அளவு இறக்குமதி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் பந்தயம் ஆகஸ்ட் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு சீனாவுக்கான ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். இது வரை நடந்துள்ள வர்த்தகம் திருப்திகரமாக இருப்பாதக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்