ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும்!

புதன், 16 ஜூலை 2008 (11:46 IST)
ரிசர்வ் வங்கி கடன் கொள்கையை பரிசீலனை செய்யும் போது வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி, வங்கிகளின் ரொக்க கையிருப்பு அளவை அதிகரிக்கும் என்று பரஸ்பர நிதியத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மும்பையில் இந்தியன் மெர்சன்ட் சேம்பர் கருத்தரங்கு ஒ‌ன்றை நடத்தியது. அப்போது எஸ்.பி.ஐ பரஸ்பர நிதி நிறுவனத்தின் முதலீட்டு பிரிவு மூத்த அதிகாரி சஞ்ஜய் சின்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், பொருளாதார பற்றாக்குறையால் நெருக்கடி அதிகரிக்கும். இதனால் நிதி சந்தையின் பணப்புழக்கத்தை குறைக்கவும், அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்.

எனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதம், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று நினைக்கின்றேன்.

அவரிடம் வங்கிகளின் வட்டி விகிதம் பற்றி கேட்டபோது, குறுகிய காலத்திற்கு வட்டி விகிதம் தற்போதைய நிலையிலேயே இருக்கும். இந்த வருடம் இறுதிவரை பணவீக்கம் குறைய வாய்ப்பில்லை. இதனால் வட்டி விகிதமும் இதே நிலையிலேயே இருக்கும்.

தற்போது கச்சா எண்ணெய் விலை அதிக அளவு உள்ளது. இதன் விலை குறைய தொடங்கும் போது, அதன் எதிரொலி பணவீக்கத்திலும், வட்டி விகிதத்திலும் இருக்கும். அப்போது வட்டி குறைய வாய்ப்புண்டு.

சிறிது காலத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. இதன் விலை குறைவதால் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் மூலப் பொருட்களின் ‌விலையு‌ம் குறையும். இதனால் இவைகளின் இலாபம் அதிகரிக்க வாய்ப்புண்டு.

பங்குச் சந்தை இப்போதுள்ள நிலையில் இருந்து மேலும் சரிய வாய்ப்பில்லை என்று கருதுகின்றேன் என்று சின்கா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்