9 விழுக்காடு வளர்ச்சி பயனற்றது - ஜோஷி!

புதன், 9 ஜூலை 2008 (14:20 IST)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் மக்களுக்கு தேவையான உணவு, கல்வி, நலவாழ்வுக்கு எவ்வித பயனும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி மூத்தத் தலைவரும், முனனாள் மனித வள மேம்பாட்டு அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும் போது, வளர்ச்சி என்பது பொருளாதார ரீதியாகவும், அதே நேரத்தில் ஏழைகளின் சமூக மேம்பாட்டுக்கு பயனளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். இல்லையெனில் உணவு பஞ்சம் ஏற்பட்டு கலவரம் ஏற்படும் என்று எச்சரித்தார்.

தற்போது நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காடு மக்களின் பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 விழுக்காடாக மட்டுமே உள்ளது.

இதற்கு காரணம், இந்தியாவின் வளர்ச்சிக்கான நடைமுறையில் உள்ள தவறே. நமக்கு தேவை எல்லா மக்களின் வளர்ச்சிக்கும் பயன்படக் கூடிய பொருளாதார வளர்ச்சி முறையே.

இதற்கு தகுந்த முறையில் எல்லா பிரிவு மக்களும் வளர்ச்சி அடைய உதவி செய்யும் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்