தனியார் பெட்ரோலிய நிறுவன இலாபம் மீது வரி - முரளி தியோரா பதில்!

செவ்வாய், 8 ஜூலை 2008 (18:29 IST)
தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக இலாபம் சம்பாதிக்கின்றன. இவற்றின் மீது வரி விதிக்க வேண்டும் என்பது தனது அமைச்சகத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விடயம் எ‌ன்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

இதே போல் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஏற்றுமதி மண்டலம் என்ற சலுகையை மறு பரிசீலனை செய்வதும் தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த கோரிக்கைகளை முதலில் இடதுசாரி கட்சிகள் எழுப்பின. தற்போது அமெரிக்க அணு சக்தி பிரச்சனையில் எழுந்துள்ள நெருக்கடியில் இருந்து மத்திய அரசை காப்பாற்ற வாக்குறுதி அளித்துள்ள சமாஜ்வாதி கட்சியும் எழுப்பியுள்ளது.

இது குறித்து முரளி தியோராவிடம் கேட்டபோது, வரி விதிப்பது. ஏற்றுமதி மணடல சலுகை தனது அதிகாரத்தில் இல்லை. எனவே இதில் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறினார்.

அதே நேரத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு துறை வளர்ச்சிக்காக தெரிவிக்கப்படும் கருத்து பற்றி திறந்த மனதுடன் ஆலோசனை நடத்த தயாரக இருப்பதாக தியோரா தெரிவித்தார்.

உலக சந்தை‌யில் கச்சா எண்ணெய் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இவை தினசரி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

ஆனால் இதற்கு மாறாக ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தின் இலாபம் சென்ற நிதி ஆண்டில் 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் இலாபம் ரூ.15,261 கோடியாக உயர்ந்துள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் போன்றவை முழுவதுமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனால் இதற்கு 1 பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு 15 டாலர் லாபம் கிடைக்கிறது. இது பொதுத்துறை நிறுவனங்களின் இலாபத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்