பிளாஸ்டிக் வியாபாரிகள் கடை அடைப்பு!

வெள்ளி, 4 ஜூலை 2008 (17:09 IST)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்களை விற்பணை செய்யும் கடைகள் வருகின்ற 7ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளன.

இது குறித்து புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் எஸ். ராஜ கணபதி, செயலாளர் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அரசிடம் பதிவு செய்துள்ள 8 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் உள்ளன. பதிவு செய்யப்படாத 9,000 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் நேரடியாக மூன்று லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை ரிலையன்ஸ், ஹால்டா போன்ற ஒரு சில நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன.

இந்த மூலப் பொருட்களின் விலையின் அடிப்படையிலேயே பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் வருவாய் உள்ளது.

ரிலையன்ஸ இன்டஸ்டிரிஸ் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்நாட்டில் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல், கட்டுப்படியாக கூடிய விலையில் மத்திய அரசு கிடைக்க வழி செய்யவேண்டும்.

இதற்கு ஏற்றார் போல் பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கு 25 விழுக்காடு ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். அதே நேரத்தில் இற்க்குமதி வரி, கூடுதல் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்ற 7ஆம் தேதி வேலை நிறுத்தமும், சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமும் மேற்கொள்ள இருக்கின்றோம் என்று தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்