பி.எஸ்.என்.எல். பங்குகளை வெளியிடுகிறது!

திங்கள், 14 ஜனவரி 2008 (16:48 IST)
தொலை தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு 10 பில்லியன் டாலர் (1 பில்லியன் நூறு கோடி) நிதி திரட்டப் போகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த போது இதை மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஏ. ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் இது பற்றி தொலை தொடர்பு துறை ஆயவு செய்து வருவதாகவும், இதில் முடிவு எடுத்த பிறகு டெலிகாம் கமிஷனின் ஆய்வுக்கு அனுப்பப்படும். இந்த பொது பங்கு வெளியீடு விரைவில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பி.எஸ்.என்.எல். நிதி பிரிவு இயக்குநர் எஸ்.டி.சேக்ஸனா கூறுகையில், இந்த பொது பங்கு வெளியீடு இந்த வருட இறுதிக்குள் இருக்கும். இதன் மூலம் 10 பில்லியன் டாலர் (ரூ.40 ஆயிரம் கோடி) திரட்டப்படும். தற்போது இதன் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர். இதில் 10 விழுக்காடு பொது பங்குகளாக வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும். இதற்கான ஆயத்த வேலைகள் செய்வதற்கு 2 முதல் 3 மாதம் வரை ஆகும். பி.எஸ்.என்.எல். பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால் இறுதி முடிவை மத்திய அரசே எடுக்கும்.

தற்போது விரிவாக்க திட்டத்திற்கு தேவையான நிதி எங்களிடம் உள்ளது. இனி எதிர்காலத்தில் விரிவு படுத்துவதற்காக நிதி தேவைப்படுகிறது. இந்த பொது பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் நிதி, எதிர்கால தேவைக்காக பயன் படுத்திக் கொள்ளப்படும் என்று கூறிய சேக்சனா, இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீடு அதிக அளவு வருகின்றது. இதுவே பொதுப் பங்கு வெளியீடுவதற்கு சரியான தருணம். இதன் சொத்து என்று கூறினார்.

பி.எஸ்.என்.எல். வருவாய் கடந்த நிதி ஆண்டில் ( 2006-07) ரூ.39 ஆயிரத்து 750 கோடியாகவும், நிகர லாபம் ரூ.7,805 கோடியாக இருந்தது. இதன் செல்போன் சேவையை நாடு முழுவதும் விரிவு படுத்த ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்