பங்குச் சந்தையில் பி.எப் பணம் முதலீடு இல்லை : பெர்ணான்டாஸ்!

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (10:35 IST)
''தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் ( இ.பி.எப் ) சேர்ந்துள்ள பணம் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது'' என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் பொருளாதார பத்திரிகையாளர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக செய்தியாளர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆஸ்கர் பெர்ணான்டஸ் பேசும் போது, தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் ரூ.1 லட்சம் கோடி இருப்பு நிதி உள்ளது. இதில் 5 விழுக்காட்டை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றி மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிதியை நிர்வகித்து வரும் இயக்குநர் குழு, அதிக ஆபத்து நிறைந்த பங்குச் சந்தையில், இதன் நிதியை முதலீடு செய்வதற்கு சம்மதிக்கவில்லை. இதில் சேர்ந்துள்ள நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு இயக்குநர் குழுவை சம்மதிக்க வைக்க அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அவர்கள் சம்மதித்தால் இதன் நிதியில் 5 விழுக்காடு பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

எதிர்காலத்தில் முதலீட்டு அளவு அதிகரிக்கப்படும். வேறு வழிகளில் முதலீடு செய்வதற்கும் அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இவை நிதி அமைச்சகத்தின் வரையறைகளுக்குள் இருக்கும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் இயக்குநர் குழுவில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஆபத்தை விலைக்கு வாங்குவதை விட வருவாய் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பான முதலீட்டையே விரும்புகின்றனர் என்று பெர்ணான்டாஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்