இந்தியா - ஜப்பான் பொருளாதாரக் கூட்டாண்மை அடுத்த ஆண்டு நடைமுறை : கமல்நாத்

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (11:56 IST)
இந்தியா - ஜப்பான் இடையே இருதரப்பு வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை அதிகரிக்க வகை செய்யும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வந்து விடும் என்று தொழில் - வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் தொடர்பாக கடந்த டிசம்பரில் இருந்து டோக்கியோவிலும், டெல்லியிலும் இதுவரை 3 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்றும், வரும் டிசம்பரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் கூட்டாண்மை ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் கமல்நாத் கூறியுள்ளார்.

வர்த்தகம், முதலீடு தொடர்பாக ஜப்பானுடன் செய்யப்பட உள்ள இந்த ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கமல்நாத் கூறினார்.

இந்திய - ஜப்பான் இடையிலான வர்த்தகம் 2006ஆம் ஆண்டில் மட்டும் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடு தற்போது 520 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்களாக உள்ளது.

(வார்த்தா)

வெப்துனியாவைப் படிக்கவும்