நெல் சாகுபடி பரப்பு 2.74 இலட்சம் ஹெக்டேர் குறைவு

திங்கள், 27 டிசம்பர் 2010 (16:33 IST)
நாட்டின் கோதுமை சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 11 இலட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ள நிலையில், நெல் சாகுபடி பரப்பு 2.74 இலட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பணப் பயிர்களின் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது கவலையளிப்பதாக அரசு கூறியுள்ளது.

கோதுமை பயிர் கடந்த ஆண்டு 253 இலட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. அது இந்த ஆண்டில் 264.13 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. கோதுமை சாகுபடியில் முதலிடத்தில் நிற்கும் உ.பி.யில் 94.31 இலட்சம் ஹெக்டேரில் இந்த ஆண்டு கோதுமை சாகுபடியாகிறது.

நெல் சாகுபடியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு அதன் பரப்பு 4.22 இலட்சம் ஹெக்டேர் குறைந்தது என்றும், அதோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 2.74 இலட்சம் ஹெக்டேர் மட்டுமே குறைந்துள்ளது என்று அரசு புள்ளி விவரம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்த நடந்த சாகுபடியில் நெல் உற்பத்தி 1.2 கோடி டன்னாக இருந்தது. இதன் காரணமாக அரிசி விலை கிலோவிற்கு ரூ.2 முதல் 3 வரை குறைந்துள்ளது. ஆனால் தற்போதுள்ள நிலையில் வரும் கோடையில் அரிசி ரகங்களின் விலைகள் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்