நெல் பச்சை நிறத்தில் இருந்தாலும் பதர்தான்

திங்கள், 15 டிசம்பர் 2008 (13:08 IST)
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்பயிர்கள் பச்சை நிறத்தில் தோற்றம் அளித்தாலும், மகசூல் பதராகத்தான் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் தாலுகாக்களில், மழை வெள்ளத்தால் நெல்பயிர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் மடைப் பகுதியில் பயிர்கள் நான்கு நாட்களும், இடை மடைப் பகுதிகளில் 6 நாட்களும், கடைமடைப் பகுதிகளில் 9 நாட்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன.

தண்டு உருண்டு பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த முதிர்ந்த பயிர்கள், நான்கு நாட்கள் தண்ணீருக்குள் இருந்து சாய்ந்ததால், கதிர்கள் பக்க வாட்டில் வெளிவந்து விட்டன.

இந்த பயிர்களை தற்போது பார்த்தால் பச்சைப் பசேலென்று காணப்படும் ஆனால் கதிர்களில் மசூல் வெறும் பதராகவும், கருகியும் இருக்கும். இதனால் விவசாயிக்கு எந்தப் பயனும் இல்லை.

இத்தகைய பயிர்களை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களாகக் கணக்கெடுக்க, கிராம நிர்வாக அலுவலர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்தப் பயிர்களின் உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு, அவற்றையும் பாதிக்கப்பட்ட பயிர்களாகக் கருதவேண்டும் என்று பாசிமுத்தான் ஓடைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்