கடைமடை பகுதிக்கு கூடுதல் தண்ணீர்!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (17:23 IST)
நாகப்பட்டினம்: கடைமடை பகுதிகளின் நெல் சாகுபடி வேலைகள் பாதிப்பு இல்லாமல் நடைபெற, இந்த பகுதி பாசனத்திற்கு முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாகை, கீழ்வேளூர், தலைஞாயிறு, திருமருகல் உள்ளிட்டப் பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சாகுபடி தொய்வின்றி, சிறப்பாக நடைபெற முறைவைக்காத பாசன முறை அவசியம்.

இந்த பகுதியில் நடவு மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்றவும், தாளடி நடவுப் பணிகளைத் தொடங்கவும், மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீரைக் கூடுதலாகத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் வி. சரபோஜி கேட்டுக் கொண்டுள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்