தேயிலை தேக்கம்- விவசாயிகள் கவலை!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (16:25 IST)
குன்னூர்: பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், உலக அளவில் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குன்னூரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் சுமார் 20 லட்சம் கிலோ வரை தேயிலை, விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்று வர்த்கர்கள் தெரிவித்தனர்.

நீலகிரியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் தேயிலை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தன. இதனால் தேயிலைக்கு நல்ல விலையும் கிடைத்தது. சமீப காலமாக குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களாக அந் நாடுகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் தேயிலை இறக்குமதிக்காக, துபாய் போன்ற நாட்டு இறக்குமதியாளர்கள் கொடுக்கும் லட்டர் ஆஃப் கிரெடிட்டை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. இதனால், தேயிலை ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்ய முடியாமல் உள்ளனர்.

இதே போன்று வடமாநில வர்த்தகர்கள் வங்கிகளில் உத்தரவாதத்திற்காக வைத்துள்ள பங்குச் சந்தை ஷேர்கள் மீது, குறுகிய காலக் கடன் கொடுப்பதை வங்கிள் குறைத்து உள்ளன. இதனால் வட மாநில வியாபாரிகளும் தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளன்ர.

நீலகரி தேயிலையை அதிகமாக கொள்முதல் செய்து வந்த ரஷியா, எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளும், தேயிலை கொள்முதல் செய்வதை தாமதப்படுத்துகின்றனர்.

நீலகிரி பகுதியில் உற்பத்தியாகும் மொத்த தேயிலையில், 60 விழுக்காடு ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள், வாங்கினால் தான் நீலகிரி தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும். தற்போது 80 விழுக்காடு தேயிலை விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

இதனால் நீலகிரி தேயிலை உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில வாரங்களாக தேயிலை தோட்டம் அமைந்துள்ள பகுதிகளில், பனி பெய்ய துவங்கியுள்ளது. இதனால் செடிகளில் இருந்து பறித்து கொண்டுவரும் பச்சை தேயிலை வரத்து குறையும். தற்போது விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ள 20 லட்சம் கிலோ தேயிலை விற்பனை ஆவதற்கு வாய்ர்ரு உள்ளது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்