ஈரோட்டில் மஞ்சள் விலை சரிவு!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:11 IST)
அய‌ல் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஈரோட்டில் மஞ்சள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களான பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் சரக்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அதாவது ஈரோடு மஞ்சள் சந்தையில் இருந்து பெருமளவு மஞ்சள் பீகாரை சேர்ந்த மொத்த வியாபாரிகளே வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது ஈரோட்டில் நடக்கும் ஏலவிற்பனையில் பீகார் வியாபாரிகள் ஒருசிலர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக சென்ற வாரங்களில் குவிண்டால் ரூ.4,500 வரை விற்பனையான மஞ்சள் தற்போது குவிண்டால் ஒன்று ரூ.3,560 வரை மட்டுமே ஏலம்போனது.

வெப்துனியாவைப் படிக்கவும்