உணவு தர பரிசோதனை- அரசு நிதி உதவி!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (14:23 IST)
உணவு தரப் பரிசோதனை கூடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு 50 விழுக்காடு மானியம் வழங்கும் என்று சுபோத் காந்த் சகாய் தெரிவித்தார்.

இந்திய தொழில்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) இன்று புதுடெல்லியில் உணவு பாதுகாப்பு மற்றும் சமையலறை தரம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.

இதில் சிறப்புரையாற்றிய மத்திய உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சர் சுபோத் காந்த் சகாய் பேசும் போது, உணவு தரத்தை பரிசோதிக்கும் பரிசோதை நிலையங்களை தனியார் அமைத்தால். அதன் மொத்த செலவில் 50 விழுக்காட்டை மத்திய அரசு வழங்கும். உணவு பதப்படுத்தும் துறைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் முதலீடு செய்வர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை அரசு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சி 4 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 13.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

பதப்படுத்திய உணவு பொருட்களின் தரப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 50 பதப்படுத்தப்பட்ட உணவு தர பரிசோதனை கூடத்தை அமைக்க உள்ளது. இவற்றில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் ஒரு பரிசோதனை கூடமாவது அமைக்கப்படும்.

உணவு பதப்படுத்தும் துறையில், ஏராளமான சிறு தொழில்கள் ஈடுபட்டுள்ளன. தற்போது அமைக்கப்பட உள்ள பரிசோதனை நிலையங்கள், இவை தயாரிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை பிரசோதித்து, சான்றிதழ் அளிக்க உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில் துறையின் மதிப்பு தற்போது 100 பில்லியன் டாலராக உள்ளது. இதன் வளர்ச்சி 2014-15 ஆம் ஆண்டில் 330 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்