சர்க்கரை மானியம் செப்டம்பர் வரை மட்டுமே - சரத் பவார்!

வியாழன், 5 ஜூன் 2008 (18:39 IST)
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரைக்கு அரசு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே மானியம் வழங்கும் என்று மத்திய விவாசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு சென்ற வருடம் கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அத்துடன் சர்க்கரை ஆலைகள் கரும்பு வெட்டுவதற்கான உத்தரவுகளை உரிய காலத்தில் கொடுக்கவில்லை. இது போன்ற காரணங்களினால் பல விவசாயிகள், கரும்புக்கு பதிலாக மற்ற பயிர்களுக்கு மாறிவிட்டனர்.

இதனால் அடுத்த வருடம் சர்க்கரை உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சர்க்கரைக்கு மானியம் நிறுத்தப்படும் என்று சரத்பவார் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரோமில் நடைபெற்றுக் கொண்டுள்ள உணவு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள சரத்பவார், சர்க்கரை ஆலைகள், அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

சர்க்கரை உற்பத்தி கடந்த இரண்டு வருடங்களாக அபரிதமாக இருந்தது. அடுத்த ஆண்டு (சர்க்கரை ஆண்டு அக்டோபர்- செப்டம்பர்) குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் சர்க்கரை உற்பத்தி 220 முதல் 230 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உள்நாட்டு தேவையை சமாளித்து விடலாம்.

இந்த செப்டம்பரில் முடியும் சர்க்கரை ஆண்டில், இதன் உற்பத்தி 270 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (2006-07 ஆம் ஆண்டு 280 லட்சத்து 30 ஆயிரம் டன்)

2006-07 ஆம் ஆண்டில் சர்க்கரையின் உற்பத்தி அதிகரித்து, விற்பனை செய்ய முடியாமல் ஆலைகள் திணறின. இவைகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் உலக சந்தையிலும் சர்க்கரை விலை குறைந்தது.

இதனால் மத்திய அரசு கடற்கரை மாநிலங்களில் அமைந்துள்ள சர்க்கரை ஆலைகளுக்கு 1 டன்னுக்கு ரூ.1,350ம், மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள சர்க்கரையை ஆலைகளுக்கு 1 டன்னுக்கு ரூ.1,450 ஏற்றுமதி செய்வதற்கு மானியம் வழங்கியது.

இதனால் சர்க்கரை ஆலைகள் 30 லட்சம் டன்னுக்கும் அதிகமாக சர்க்கரை ஏற்றுமதி செய்யும் என எதிரிபார்க்கப்படுகிறது.

சர்க்கரை உற்பத்தி அதிக அளவு இருப்பதால், ஆலைகளின் நெருக்கடியை குறைக்க ஏற்றுமதி மானியம் வழங்கப்படுவதுடன், ஆலைகளிடம் இருந்து வாங்கி 50 லட்சம் டன் இருப்பாக வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்