பஞ்சாபில் கோதுமை கொள்முதல் திருப்தி!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (18:47 IST)
பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை கொள்முதல் எதிர்பார்த்த அளவு இருக்கின்றது.

இந்தியாவின் முக்கிய உணவு தானியங்களான கோதுமை, நெல் உற்பத்தியை பொறுத்தே, இதன் விலைகளும் இருக்கும். சென்ற வருடம் கொள்முதல் பாதிக்கப்பட்டாதால், மத்திய அரசு பற்றாக்குறையை சமாளிக்கவும், சந்தையில் விலை உயர்வை தடுக்கவும் கோதுமையை இறக்குமதி செய்தது. அத்துடன் கோதுமை கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.800 இல் இருநது ரூ.1,000 மாக உயர்த்தியது.

தற்போது உணவு தா‌னியங்களின் விலை அதிகரித்து, இதன் எதிரொலியாக பணவீக்கமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கோதுமையின் அளவு திருப்திகரமாக இருப்பதாக தெரிகிறது.

இதுவரை (ஏப்ரல் 17 ) மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசின் ஐந்து அமைப்புக்களும் சேர்ந்து 17 லட்சத்து 8 ஆயிரம டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளன.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 22 லட்சத்து 8 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்திருந்தன.

இந்த வருடம் கோதுமை விளைச்சல் நன்கு இருந்தாலும், கொள்முதல் குறைந்ததற்கு காரணம், இந்த மாதம் ஆரம்பத்தில் மழை பெய்தது. இதனால் அறுவடை தாமதமானது. அத்துடன் நிலங்களில் ஈரப்பதம் அதிக அளவு இருப்பதால் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை. அடுத்து வரும் நாட்களில் அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்த சாதகமாக வானிலை நன்கு இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கோதுமை கொள்முதல் பற்றி ஆய்வு மேற்கொண்ட பஞ்சாப் கொள்முதல் மண்டி வாரிய தலைவர் அஜ்மீர் சிங், இன்று மோகா என்ற நகரத்தில் செய்தியாள‌ர்களிடம் கூ‌றியதாவது:

இந்த வருடம் பஞ்சாப் மாநிலத்தின் கொள்முதல் இலக்கான 145.6 லட்சம் டன் அளவை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போதை மதிப்பீட்டின்படி 105 லட்சம் டன் கொள்முதல் செய்ய முடியும். இதில் அரசு அமைப்புகள் 93.4 லட்சம் டன்னும், மீதம் தனியார் வர்த்தகர்களாலும் கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசுக்காக 80 லட்சம் டன் கொள்முதல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

மண்டி வாரிய உதவி கமிஷனர்களிடம், மண்டிகளிலும், மற்ற கொள்முதல் நிலையங்களிலும் கோதுமையை விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். அத்துடன் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யும்படி கூறியுள்ளோம்.

இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றினா‌ர்.

மத்திய அரசுக்காக கோதுமையை இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்கிறது. இவை வேலைக்கு உணவு திட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷனில் வழங்குதல், மாவு மில்களுக்கு பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்தல் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் குறிப்பிட்ட அளவு அவசரகால இருப்பாக வைக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்