பருவமழை சராசரி அளவாக இருக்கும்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (19:04 IST)
இந்த வருடம் இந்தியா முழுவதும் பருவ மழை சராசரி அளவு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவம் தவறி மழை பெய்வதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் வெள்ளத்தால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி, விளை பொருட்கள் சேதமடைகின்றன. ஏற்கனவே உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்து உள்ளது. இதனால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் இந்தியா முழுவதும் பருவமழை பொய்க்காமல். சராசரி அளவு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் மே மாதத்தில் விரிவான வானிலை அறிக்கையை வெளியிடும். இதில் நாட்டின் பகுதிவாரியாக மழை பெய்வது பற்றிய தகவல்கள் இடம் பெறும்.

இந்தியாவில் கரீஃப் பருவத்தில் பயிரிடப்படும் பணப் பயிர்கள், பருப்பு வகைகளுக்கு நீர் ஆதாரமாக தென் மேற்கு பருவ மழையையே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த பருவத்தில் இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு மழையையே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. பொதுவாக தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதம் பெய்யும். இந்தியாவின் மொத்த மழை பொழிவில் இது 80 விழுக்காடு ஆகும்.

தென் மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை என்றால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். இதன் தொடர் விளைவாக விலை உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள ஆய்வறிக்கையின் படி, நீண்ட கால மழை பொழிவை கணக்கில் கொள்ளும் போது, இந்த வருடம் 99 விழுக்காடு மழை பெய்யும். இது 1941 முதல் 1990 வரை பெய்த மழை அளவை கணக்கில் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் படி 89 செ.மீ. மழை பதிவாகும். வட கிழக்கு மாநிலங்களில் மட்டும் மழை சிறிது குறையும். மற்ற பிராந்தியங்களில் சராசரியான அளவு பெய்யும்.

வானிலை ஆய்வு மையம் இந்த வருடத்தில் இருந்து சராசரி, சராசரிக்கும் அதிகமாக, சராசரிக்கும் குறைவாக என்று மூன்று விதமான வகைப்படுத்துதலை மட்டுமே அறிவிக்கும்.

நீண்டகால மழை பொழிவின் அடிப்படியில் கணக்கிடப்படும் அளவு கோளின் படி 96 முதல் 104 விழுக்காடு மழை பெய்தால் சராசரி மழை என்றும், 90 முதலி 96 விழுக்காடு மழை பெய்தால் சராசரிக்கும் குறைவான மழை எனவும், 106 முதல் 110 விழுக்காடு மழை பெய்தால் சராசரிக்கும் அதிகமான அளவு மழை என்று கணக்கிடப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்