பால்கறக்கும் இயந்திரம் : நாம‌க்கல் விவசாயிகள் மகிழ்ச்சி

வெள்ளி, 14 மார்ச் 2008 (12:38 IST)
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பால்கறக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவிதம் விவசாய குடும்பங்கள் வசிக்கும் நம் நாட்டில் பால் மாடு வளர்ப்பு என்பது பழங்காலம் முதலே நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் கிராமங்களில் வீடு தவறாமல் கறவை மாடுகளை வைத்துள்ளனர். மாடு வளர்ப்போர் கடந்த 15 ஆண்டுக்கு முன் மாடுகளை பராமரிக்கவும், பால் கறக்கவும் பண்ணை ஆட்களை நியமித்து இருந்தனர்.

ஆனால் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காரணம் நூ‌ற்பு ஆலை உள்ளிட்ட பல்வேறு ஆலை தொழில்களுக்கு மக்கள் சென்றுவிடுகின்றனர். அதன் விளைவாக 10 முதல் 20 மாடுகள் வரை இருந்த ஒரு விவசாயி வீட்டில் தற்போது ஒன்று, இரண்டு மாட்டை பார்ப்பதே அரிதாக உள்ளது.

பணம் படைத்த சிலர் பிரம்மாண்டமான பால் பண்ணைகளை துவக்கி ஆயிரக்கணக்கான மாடுளை வளர்த்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர். அவர்கள் விலை உயர்ந்த தீவனம் வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்கின்றனர்.

அதற்காக மாடுகளில் இருந்து பால் கறக்க ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள நவீன இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். கிரமப்புறங்களில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை.

பால் கறக்க ஆள் கிடைக்காததால் மாடு வளர்ப்பதை ஏராளமான விவசாயிகள் நிறுத்தி விட்டனர். வீட்டு உபயோகத்துக்கு மட்டும் ஒன்றிரண்டு மாடுகள் வைத்துள்ளனர்.

இக்கட்டான இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், குறைந்த விலையில் ரூ.14 ஆயிரத்துக்கு பால் கறக்கும் இயந்திரம் விற்பனைக்கு வந்துள்ளது.

ஏற்கனவே கேரளா, மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் இதை வெற்றிகரமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் மற்றும் கையால் இயக்கப்படும் இந்த இயந்திரத்தில் பால் கறக்க ஒரு மாட்டிற்கு மூன்று நிமிடங்கள் மட்டும் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்