உறைபனி : விவசாயிகளுக்கு நஷ்டஈடு!

சனி, 16 பிப்ரவரி 2008 (17:05 IST)
ராஜஸ்தான் மாநில அரசு உறைபனியாலும், பனிக்காற்றாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.126 கோடி நஷ்டஈடு வழங்கப் போகிறது.

இந்த வருடம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியான, மத்திய பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களில் கடுமையான உறை பனியும், குளிர் காற்றும் வீசியது. இதனால் விளைந்த பயிர்கள் உறை பனியால் கருத்து போயின. அத்துடன் குளிர் காற்றால் பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க ராஜஸ்தான் மாநில அரசு ரூ.126 கோடி ஒதுக்கியுள்ளது.

இதற்கான முடிவு நேற்று முதல்வர் வசந்தரா ராஜூ தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதை பேரிடர் நிவாரணத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் தேவ், சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் ரத்தோரி ஆகியோர் தெரிவித்தனர்.

இது குறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ரத்தோரி செய்தியாளர்களிடம் கூறும் போது, மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட விபரம் கிடைத்தவுடன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து நஷ்டஈடு விநியோகிக்கப்படும். இதில் ரூ.101 கோடி, பாதிக்கப்பட்ட 1,37,287 விவசாயிகளுக்கு வழங்கப்படும். சிறு மற்றும் குறு விவசாயிகளின் நான்கு மாத மின் கட்டணத்தை ரத்து செய்வதற்கு ரூ.15 கோடியும், தண்ணீர் வரி தள்ளுபடி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிரிட்ட பரப்பளவில் 50 விழுக்காடுக்கும் அதிகமாக பாதிப்பு இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நில வரி ரத்து செய்யப்படும். அத்துடன் குறுகிய கால கடன்கள் நீண்ட கால கடன்களாக மாற்றப்படு்ம்.

பேரிடர் நிவாரணத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் தேவ் கூறும் போது, மாநிலத்தின் 22 மாவட்டங்களில் பனிக்காற்றால் 8 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் சராசரியாக 40 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கிலாட் கூறும் போது, இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பிய பிறகு தான் அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரண நிதி போதுமானதல்ல என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்