காதலுக்கும், பாலுறவுக்கும் உள்ள தொடர்பு

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:13 IST)
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல - திருக்குறள்.

இந்தக் குறளையே பின்னாளில் வந்த சினிமா பாடலாசிரியர்கள் பலவாறாக தங்களின் கற்பனை நயங்களைச் சேர்த்து பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

`கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்' என்று ஒரு கவிஞர் எழுதினார்.

சரி, இதையெல்லாம் ஏன், இப்போது குறிப்பிடுகிறோம் என நீங்கள் கேட்பது புரிகிறது.

இப்போது விடயத்திற்கு வருவோம்.

முந்தைய கட்டுரையில் திருமணமான தம்பதிகள், குறிப்பிட்ட இடைவெளியில் பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொண்டால், கணவன்-மனைவி இடையேயான அன்பு மாறாமல் உறவு நீடிக்கும் என்று கூறியிருந்தோம்.

அந்தவகையில் காதலும், பாலுறவும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு நண்பர் காதல் பற்றி மிகக் கடுமையாக சாடினார். ``காதல் தெய்வீகமானது. காதலிக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்பதெல்லம் சுத்தப்பொய். காதல் என்பதே பாலுறவுடன் மறைமுகத் தொடர்பு உடையது'' என்று கூறினார்.

அதையெல்லாம் மறுத்து, அவருக்கு விளக்கம் கொடுத்த நிலையில், அவர் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு நம்மால் மறுத்துப் பதில் அளிக்க இயலவில்லை.

``காதலித்து திருமணம் முடிந்த பின் பாலுறவுப் புணர்ச்சி கொள்ளாதவர்கள் யாரேனும் உண்டா? காதலின் உச்சக்கட்டம் அல்லது எல்லை பாலுறவுப் புணர்ச்சிதானே?'' என்று வினவியதற்கு ஆம் என்ற பதிலைத் தவிர நம்மிடம் வேறு பதில் இல்லை.

``இளம் பருவத்தில், 20 - 30 வயதுகளில் காதலித்து திருமணம் முடித்து, குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட பின், 10 ஆண்டுகளுக்குப் பின் யோசித்தால், தாங்கள் செய்தது சுத்த போலித்தனம் என்பதை உணர்வார்கள்'' என்று அந்த நண்பர் உறுதிபடக் கூறினார்.

நண்பர் கூறியதை சரி என ஆமோதிக்க முடியா விட்டாலும், அந்தக் கூற்றின் யதார்த்தத்தை அலசிப் பார்ப்போம்.

ஆணோ அல்லது பெண்ணோ இருபாலரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் அவர்களுக்கு எதிர்பாலினத்தவரின் உறவு தேவைப்படுகிறது.

அது உடலுறவு அல்லது பாலுறவுப் புணர்ச்சிதான் என்றில்லை. வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் முன்னேறுவதற்கும் ஒரு துணை தேவையாகிறது. இதுபற்றி ஏற்கனவே வெளியான கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளோம்.

வாழும் சமூகம், அண்டை வீட்டார் என்று காதலின் துவக்கம் எங்கிருந்து வேண்டுமானாலும் இருக்கட்டும்.

காதலிக்கும் வரை அழகாகத் தெரிந்த காதலனோ அல்லது காதலியோ ஒரு குழந்தையைப் பெற்ற பின் உடல் எடை அதிகரித்து, பார்ப்பதற்கு அசிங்கமாகத் தெரிவதாகக் கூறும் எத்தனையோ காதலர்களை அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்.

இதில் பலர் பெற்றோரை எதிர்த்து, திருமணம் செய்து கொண்டு, சிறிது காலம் வாழ்ந்து விட்டு பின்னர் விவாகரத்து வரை சென்ற நிகழ்வுகளும் அடங்கும். அதற்காக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இறுதிவரை இணை பிரியாமல் வாழும் தம்பதிகளும் இல்லாமல் இல்லை.

காதலர்கள் திருமணம் செய்து கொண்டு, சந்ததி விருத்தி என்று வரும்போது, அதுவரை இருவரின் பெற்றோரும் எதிரும் புதிருமாக இருந்த போதிலும், தங்கள் பேரன் - பேத்தி என்று வரும் போது ஜாதி, மதங்களைப் பார்ப்பதில்லை. ஒன்று கூடி விடுவதைப் பார்க்கிறோம்.

எனவே குடும்பத்தினருடன் காதலர்களை சேர்த்து வைப்பதிலும் பாலுறவு முக்கியப் பங்காற்றுகிறது என்றால் மிகையில்லை. காதலை பாலுறவுடன் ஒப்பிடுவதால், காதலுக்கு எதிரானவர்களாகக் கருதி விடக்கூடாது.

காதலர்களுக்கு பாலுறவுப் புணர்ச்சி என்பது, அவர்களின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதோடு, எதிர்காலத்தில் உறவுப் பிணைப்பை உருவாக்கவும் வகைசெய்கிறது எனலாம்.

காதலர்களோ அல்லது நண்பர்களோ, திருமணத்திற்கு முன் பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளலாமா?

திருமணம் முடிந்த பின் கணவனோ, மனைவியோ ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர், வேறுநபர்களுடன் பாலுறவுப் புணர்ச்சி கொள்ளலாமா? அதனால் என்னென்ன சமூகப் பிரச்சினைகள் ஏற்படும்? என்பது பற்றி பிறகு பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்