ஓரினச் சேர்க்கை ஒரு மனநோயா?

புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:15 IST)
பாலியல் உறவு, அதனை எந்தவகையில் - எந்த சூழ்நிலையில் எப்படிக் கையாளவது? என்பது பற்றியெல்லாம் இப்பகுதியில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இரு எதிரெதிர் பாலினத்தவர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படுவது பாலுறவுப் புணர்ச்சி. இதுவே இயற்கையான புணர்ச்சி எனலாம்.

ஆனால், இயற்கைக்கு மாறாக ஒரு ஆண், ஆணுடனோ அல்லது ஒரு பெண் பெண்ணுடனோ பாலுறவு வைத்துக் கொள்வது ஓரினச் சேர்க்கை எனப்படுகிறது.

ஆண்கள் ஓரினச் சேர்க்கையை `ஹோமோ செக்ஸ்' (Homo Sex) என்றும், பெண்களுக்கு இடையேயான ஓரினச் சேர்க்கையை லெஸ்பியன் (Lesbian) என்றும் கூறுகிறோம்.

கிரேக்க மொழியில் ஹோமோ என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம். ஓரினச் சேர்க்கையை பல பெயர்களில் அழைத்த போதிலும், ஜெர்மன் உளவியல் நிபுணர் `கார்ல் மரியா பென் கெர்ட்' என்பவர் தான் ஹோமோ செக்ஸ் என முதன்முதலில் பயன்படுத்தினார்.

கிரேக்கத்தில் அடங்கிய லெஸ்போஸ் (Lesbos) தீவில், கி.மு 7ம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் உறவு கொள்வதை வெகுசாதாரணமாகக் கொண்டிருந்தனர்.

இந்த உறவை அப்போது அந்த தீவில் வாழ்ந்த ஸாப்போ என்ற கவிஞர் வர்ணித்து எழுதினார். அன்று முதல் லெஸ்போஸ் தீவு பிரபலமடைந்தது. இதன் அடிப்படையிலேயே லெஸ்பியன் என்ற வார்த்தை உருவானதாகத் தெரிகிறது.

மனிதர்கள் தோன்றிய காலத்திலிருந்தே ஓரினச் சேர்க்கையும் மனித சமூகத்தில் இருந்து வந்திருப்பதை பல்வேறு தகவல்கள் மூலம் அறிகிறோம்.

மிகச் சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்தவர்கள் கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். போரில் தோற்கும் நாடுகளைச் சேர்ந்த போர் வீரர்களை, வெற்றி பெற்ற நாட்டினர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியிருப்பதையும் அறிகிறோம்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வரை, ரோம் நாட்டில் ஓரினச் சேர்க்கையை சமுதாயம் தவறாக நினைக்கவில்லை. இந்த உறவுக்கு சமூக அங்கீகாரமும், சட்டரீதியான அங்கீகாரமும் கூட அளிக்கப்பட்டிருந்ததாம்.

கிறிஸ்து பிறப்புக்குப் பின் 4ஆம் நூற்றாண்டில், ஓரினச் சேர்க்கை
மீதான சமுதாயத்தின் பார்வை மாறத் தொடங்கியது. ஆசனவாய் வழியாக பாலுறவில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணம் வலுப்பெற்றது.

கிறிஸ்தவ மதம் தோன்றி உலகெங்கும் பரவ ஆரம்பித்த பின், குழந்தை பிறக்க எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையில் பாலுறவில் ஈடுபடுவது பாவம். அது இயற்கைக்குப் புறம்பானது என்று கூறப்பட்டதுடன் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான பிரசாரம் கிளம்பியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓரினச் சேர்க்கை தவறானது என மருத்துவ உலகமும் தெரிவித்து விட்டதால், அது ஒரு நோய் என்ற தகவல் பரவலாக எழுந்தது. ஓரினச் சேர்க்கை ஒரு மனநோயாகவும் கருதப்பட்டது.

இதுஒருபுறமிருக்க, ஐரோப்பாவை ஆட்டிப்படைத்த நெப்போலியன், 1804-ல் வயதுக்கு வந்த இருவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை என்று சட்டம் போட்டான். இதுவே சரித்திரத்தில் ஓரினச் சேர்க்கை பற்றிய முதல் சட்டம்.

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? எதனால் அதுபோன்ற மனப்போக்கு ஏற்படுகிறது? என்பது பற்றியெல்லம் தொடர்ந்து வரும் பகுதிகளில் அறிவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்